ஞாயிறு, ஜூன் 22, 2014

குட்டி கதை




அனைவருக்கும் அப்படித்தான் தோன்றியது.
 
 படுக்க முடியாமல் நின்றுக்கொண்டும் நடந்துக்கொண்டும் மூச்சு வாங்கிக்கொண்டும் இருப்பதைப்பார்த்தால் நிச்சமாகிவிட்டது அனைவருக்கும். 

 டெலிவரி.

  என்ன பண்றது...
“மாப்பிள்ளை உடனே ஃபோன் வேற பண்ண சொல்லி இருந்தார்மா”.

“சரிடி என்னனு பாத்துகினு ஃபோன் பண்ணலாம்”

“பாவம்மா அவர் ரொம்ப ஃபீல் பண்ணுவார்”
“என்னத்துக்கு ?……நாங்க எல்லாரும் இருக்கோம் இல்லையா......கவலைப்படாதேடி எல்லாம் நல்லபடியா நடக்கும்”
“சரிம்மா”   
 
இரவு 8.00 மணி...... நேரம் ஆக ஆக பதைபதைப்பு கூடியது....
டாக்டர் வேற சாப்பிட்டுட்டு வரேன் அப்படினு சொல்லிட்டுப்போயிட்டார்....
எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும் எதோ பெரிசு ஒன்னு சொல்லியபடி நடந்துச்சென்றது.


மாப்பிள்ளை.

கம்பியூட்டர் எஞ்சினியர்.துபாய் வாசம்.
 ஆரம்பத்தில் இந்த கிராமமே அவருக்குப்பிடிக்கவில்லை.அங்கே செட்டில் ஆகும் வாய்ப்பு. தூரத்துச்சொந்தம் தான் என்றாலும் பட்டனத்திலே பிறப்பு வளர்ப்பு எல்லாம். அப்பா அம்மாவின் கட்டாயத்தினால் தான்...... ஏதோ படித்தப்பெண் என்ற காரணத்தினாலும் இந்த திருமணமே செய்துக்கொண்டதாக பலரிடம் வெளிப்படையாகவே கூறியும் இருக்கிறார். யாரிடத்திலும் முதலில் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை.அதுவும் மாமனார் மாமியார் என்றால் இன்னும் அதிகம். ஆனால் இரண்டு வருடத்திற்குள் அப்படியே மாறிவிட்டார். அதுவும் மனைவி கர்ப்பம் எனத்தெரிந்ததில் இருந்து நிலைமையே தலைகீழாகிப்போனது. கூடவே துபாய்க்கு கூட்டிக்கொண்டுப்போகிறேன் என்றவர் ஏதோ அங்கிருந்து அமெரிக்காவில் சென்று மாதக்கணக்கில் தங்கவேண்டியிருப்பதால் அடுத்தவருடம் அழைத்துக்கொண்டுப்போகிறேன் என்று சென்றவர்.


போனமுறை விடுமுறையில் வந்தபொழுது இரண்டுசக்கர வாகனத்தில் அடிப்பட்டு கட்டுடன் வீட்டில் படுத்திருக்க உற்றார் உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்துப்போனதில் இருந்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை,கிராமத்தின் அன்பின் வாசம் பிடித்துப்போயிற்று. 

ஒருமுறை நண்பர்கள் கள் வாங்கிக்கொடுத்து கருவாட்டு வறுவலுடன் சாப்பிட்டு தோட்டத்தில் மாமரத்தின் அடியில் படுத்திருப்பது அவ்வளவாக பிடித்துப்போயிற்று.அங்கே கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்குவது வாவ் என்பார்.அப்பா என்னமா தூக்கம் வருது....!  என்னமா அனுபவிக்கிறாங்க இயற்கையை என்பார். எப்ப கள் சீசன் என்பது தான் அவர் நண்பர்களுடன் ஃபோனில் கேட்கும் முக்கிய கேள்வியாம் கிண்டல் பண்ண தொடங்கிவிட்டார்கள். மாடுகளை கண்டு மிரண்டவர் பின்னர் எங்களைப்பார்த்து அவைகளுக்கும் நண்பர்கள் ஆகிப்போனார். அதுவும் லட்சுமி மிகப்பிடிக்கும் அதற்கு ஊட்டியேவிடுவார்.... கொள்ளைப்பிரியம். ஃபோனில் பேசும்போதுக்கூட அதனை விசாரிப்பார்.

 எவ்வளவு பணம் வேணும்னாலும் சொல்லுங்க அனுப்பறேன் ஒரு பத்துஏக்கர் நிலம் மட்டும் வாங்கி குடுங்க... மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை அப்படி இப்படினு இங்கியே செட்டில் ஆகிடனும்... நிறைய பனைமரம் தென்னை மரம் வைக்க வேண்டும்..எல்லோரும் ஓ போட்டார்கள் பனை மரம் எதுக்காம்? தெரியாதவள் போல் கேட்டாள் மாமியார்...
.இப்படியாக கிராமத்துடனும் உற்றார் உறவினர்களுடனும் ஒன்றிப்போனதில் அனைவருக்கும் மிக்க சந்தோஷம்.

மகள் அப்படியும் இப்படியுமாக அலைந்துக்கொண்டிருப்பது அம்மாவுக்கு மிகவும் கவலை அளித்தது.

சாப்பிட்டு அனைவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

இரவு 10.35 மணி.........
வாசலில் நடந்துக்கொண்டிருந்த மகளை எங்கே காணோம் எனத்தேடியவள் தோட்டத்தில் இருந்து அம்மா...... என்ற அலறல்  குரலைக்கேட்டு ஓடிவந்தாள் “என்னடி ஆச்சு?.”.....

“அங்கப்பாரேன்.....! ”

லட்சுமி கன்றுக்குட்டியை நாவால் நக்கிக்கொண்டிருந்தது...... “என்னங்க சீக்கிரம் வாங்க....லட்சிமி கன்னுக்குட்டி போட்டுடுச்சு”......

“அம்மா அம்மா மாப்பிள்ளைக்கு ஃபோன் போட்டு சொல்லிடலாமா?”
 “அட அசடு அப்புறம் தான் சொன்னாப்போச்சு.... அவர் கிளம்பி வந்தாலும் வந்திடுவார்..... இப்ப கள் சீசன் வேற இல்ல” எனக்கேலிச்செய்தாள் தன் மகளை.
மூக்கும் முழியுமாய் அப்படியே அம்மாவைப்போல் இருந்தது......

                     கன்றுக்குட்டி.

11 கருத்துகள்:

  1. சொல்லியவிதமும்
    முடித்த விதமும் அருமை
    தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆகா
    என்னவோ நினைத்தேன்
    அருமையான திருப்பத்துடன் முடித்து வீட்டீர்கள்
    அருமை
    அருமை
    நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. நிச்சயமாக. கள் கிளப்பிய சந்தேகமோ?

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!