சனி, அக்டோபர் 05, 2013

சின்ன.... சின்ன ....

சின்ன.... சின்ன ....

&&&&&&&&&&&&&&&

 

பேசாத வார்த்தைகளின்

பெயர் -

மௌனம்.

...........................

திடீரென ஏறுகிறது

திடீரென குறைகிறது

“பிபி யும் பெட்ரோலும் ஒன்றோ ?

....................................

வடையும்  விருந்தும்

வயிற்றை நிறைத்தது.

அன்றாடம் வர வேண்டும்

அமாவாசை.

வரம் கேட்கும் காக்கைகள்.

......................................

ஒரு மனம் கட்டும்

ஒன்பது தாஜ்மகால்.

செலவா என்ன?

காதல் கற்பனை.

..................................

சின்ன சின்ன பொய்கள் தான்

சிறப்பாக்குகிறது-

வாழ்க்கையையும்... கவிதையையும்.

...........................................

உங்களுக்கு

வேண்டாதவைகளால்

என்

வயிற்றை நிரப்பிக்கொள்கிறேன்-

குப்பைத்தொட்டி.

...........................................

புயல் வர வேண்டும்

பூகம்பம் வர வேண்டும்

சுனாமி வர வேண்டும்

உலகத்தாரின் மனித நேயம் வளர.

மற்ற நேரங்களில்

மறைந்திருந்து பார்க்கும்

மர்மம் என்ன மனித நேயமே ?

.......................................

ஆயக்கலைகள்

அறுபத்துநான்கில் ஒன்றாக இருக்குமோ ?

இலஞ்சம் வாங்குவது.

....................................

“மச்சான்ஸ்.....

“செம....

பின்னிட்ட....

“தூள்.....

“குத்துனா  இது தான். செம குத்து....

“சான்ஸே இல்ல.....

அன்றாடம் நாம் கேட்கும்

அழகிய தமிழ் வார்த்தைகள்.

.......................................

விளையாட்டுக்கு கூட

வீடு கட்டி

விளையாட முடியவில்லை-

மணல் கொள்ளை.  

................................

 

அன்னை இல்லம்

அம்மா உணவகம்

தாய் மருந்தகம்

அனைத்தும் அவள் பெயரில்

இருக்க வேண்டும்.

  

அவள் மட்டும்

அனாதை இல்லத்தில்.

...................................

ஆழ குழி தோண்டி

அதுலே ஒரு முட்டையிட்டு

அன்னார்ந்து பார்த்தால்

தொண்ணூறு முட்டை-

தென்னை. இது அந்த காலம்.

 

ஆழ குழி தோண்டி

அதுலே கம்பி நட்டு

அன்னார்ந்து பார்த்தால்

ஆயிரம் பெட்டிகள்-

அடுக்கு மாடிகள். இது இந்தக் காலம்.

...................................................

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!