வியாழன், ஜனவரி 16, 2014

தவறு எங்கே...???



           

தரம் பார்த்து திடம் பார்த்து
தயாரிக்கப்பட்ட தங்க கோடாரிகள்
தானே வெட்டிக்கொள்ளும்
தற்கொலை கோடாரிகளாய்
ஆகிப்போவது தான்
அதிர்ச்சி.
......................தூக்குக்கயிறு......................

                                                

                                                தவறு  எங்கே........???


சிறிய குடும்பம்.


அப்பா + அம்மா+1பையன்+1பெண்.
வளர்ந்து விட்ட வாலிபன். பிரபல கல்லூரியில் DEEE…..பாலிடெக்னிக் 3ம் ஆண்டு படிக்கும் பிள்ளை. பெண் 10ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி. நகரின் பிரதான இடத்தில் இரண்டு மாடி கட்டிடம் வீடு. கீழ்தளம் படுக்கை அறை கொண்ட பகுதி..... HOUSE OWNERS இவர்கள் மட்டும். நான்கு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.ஒவ்வொரு வீடும் தலா 2500ரூபாய் வாடகை.சொந்த ஊரில் சுமார் 7கிலோமீட்டர் தொலைவில் நிலம் 7 அல்லது 8 ஏக்கர் பம்ப் செட்டுடன். குறைவில்லா செல்வம். ஆக்டிவா- இரண்டு சக்கர வாகனம்.
      பெற்றோருக்கு எப்படி இருக்கும் கற்பனை.


ஒரு பையன் படித்துக்கொண்டிருந்தது +2.

அப்பா இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு. அம்மா குடும்பத்தலைவி.
மறு பணி. அப்பா மீண்டும் பணியில் இருந்து ஓய்வு. இரண்டு ஓய்வூதியம் அப்பாவுக்கு.
கிராமத்தில் அழகான வீடு கொஞ்சம் நிலம்.இரண்டு மூன்று இடங்களில் வீட்டு மனைகள் வாங்கிப்போடப்பட்டுள்ளது. கிராமமும் நகரமும் அல்லாத ஒரு சதுரஅடி ரூபாய் 750 விற்கக்கூடிய இடத்தில் சுமார் 1250 சதுர அடியில் புதிய வீடு கட்டி முடிக்கப்பட்டு கிரஹபிரவேசத்திற்காய் காத்துக்கொண்டிருக்கிறது.ஒரே அண்ணன் ஆசிரியர் பணி.

முதல் பையன் முரளி. அப்பா மிகவும் கஷ்டமானகுடும்பத்தில் பிறந்தவர். ஏர் உழுவதற்கு வீடு வீடாகசென்று கூலி வேலைக்கு கேட்டு வருவார்களாம்..வேலை கிடைத்தால் சாப்பாடு.... இல்லையெனில் பட்டினி கிடந்த வேளைகள் நிறைய உண்டு என அவரே அடிக்கடிசொல்ல கேள்வி பட்டிருக்கிறேன். பின்னர் கிராமத்தில் சீட் நடத்தி எப்படிஎப்படியோ கஷ்டப்பட்டு இன்று நல்ல நிலைமையில் உள்ளார்.....

இரண்டாம் பையன். டெஸ்மன் டேனியல்.

மேற்கண்ட இரண்டு பேரும் சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்கள்.

காரணம்... ‘லேப்டாப்.... வேண்டும்.




அந்தக்காலம் :-


சுமார் 17... 18...வருடங்களுக்கு முன்பு  இருசக்கர வாகனம் (TVS50 தான் அப்ப பேமஸ்- கிராமங்களில்) இருந்தாலே அவர்கள் பணக்காரர்கள்.கிராமப்பகுதிகளில் கிறிஸ்த்துவ பாதிரியார்கள் மட்டுமே ஹீரோ ஹோண்டா வாகனம் வைத்து இருப்பார்கள். ஏதோ ஒருசில வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சிப்பெட்டி இருக்கும். தெருவே அங்கு அம்ர்ந்து பார்க்கும் சூழ்நிலை. ஊருக்கே ஒரே ஒரு போன் போஸ்ட் ஆபிசில் இருக்கும் அதுவும் எப்பவாவது தான் வேலை செய்யும்.
அந்த காலகட்டங்களில் பிள்ளைகளின் பொழுதுபோக்கு..

பையன்கள் கோலி குண்டு.. கோட்டிப்புல்..... விளையாடுதல்......தூண்டில் போடுதல் கிணறுகளுக்குச்சென்று நீச்சல் அடித்து குளித்தல்.....குருவிகள் அடித்தல்....இரவில் கபடி ஆடுதல்.....
பெண்கள்.... பாண்டி ஆடுதல் ஏழாம்கல் ஐந்தாம்கல் அச்சுக்கல்.....ஸ்கிப்பிங்.....கோகோ...இப்படி.


இந்தக்காலம் :-

இன்றையகாலகட்டங்களின் பொழுதுபோக்குகள் அறிவியல் வளர்ச்சியால் முற்றிலும் மாறிப்போனது.....நமக்கு என்னென்ன என்பது எல்லாம் தெரியும் பட்டியலிடத்தேவையில்லை.

முக்கிய இடம் பிடித்து விட்டது.... லேப்டாப்.

இன்றைக்கே வேண்டும் என முரளி அடம்பிடிக்க ...அப்பா சொன்னது... “இன்னைக்கு கிருத்திகை எந்த பொருளும் வாங்க வேண்டாம் என்கிறார்கள்... நாளைக்கு காலையில் வாங்கிக்கொள்ளலாம்.
டெஸ்மனுக்கு அப்பா சொன்னது... “நீ +2 படிச்சு முடி இன்னும் ரெண்டுமாசம் தானே. பரிட்சை நல்லா எழுதி முடிச்சதும் வாங்கிக்கொள்ளலாம்.
மேலே தந்தையர்கள் கூறியதில் என்ன தவறு.



அந்தக்காலம்:- 

ஏழெட்டு பிள்ளைகள் ஒரு குடும்பத்தில்....கிடைத்தது போதும் என்று,இருப்பதை பிடுங்கிக்கொள்வார்கள். விரும்பியதைக்கேட்டால் வெட்டு குத்துதான்...ஒருகோழியை அறுத்து ஆளுக்கு ஒன்று இரண்டு கறித்துண்டுகள் கிடைத்தாலே சந்தோஷம் என ஓடிப்போவார்கள்.
தின்பண்டங்கள்: முறுக்கு எள்ளடை பொரிவிலங்கான் உருண்டை....மாலை நேரம் அடை. இட்டலி தோசை.... ஏதாவது விசேஷம் என்றால் செய்வார்கள்..
மாவு அறைக்க ஏது நேரம்... வேலை வேலை...வேலை.


இந்தக்காலம் :- 

குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்.
செல்லம்... செல்லம்.... செல்லம்.
பீட்சா பர்கர்... ஐஸ்கிரிம்....பேக்கரி ஐட்டம்ஸ்....நான்வெஜ் இல்லாதா நாள் இல்லை வீடுகளில்.
கேட்டது கேட்ட நிமிடத்தில் கிடைக்கவேண்டும் இல்லையேல் நடப்பதே வேறாகி விடுகிறது...மேற்படி.
அந்த காலத்தில நான்  தீபாவளிக்கு புது சட்டை கேட்டதற்க்கு தெரு தெருவாய் துரத்தி துரத்தி அடித்தார் எங்க அப்பா என கூறிக்கொண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு ‘பல்ஸ்ஸர் வண்டி வாங்கி கொடுத்த அப்பா என்னிடம் வண்டி ரேட் என்பது கிட்ட வந்து விட்டது கூறி சிரித்தார்.அவரிடம் இருப்பது TVS -WEGO (இதெல்லாம் ஒரு வண்டியா என்கிறானாம்)
செல்போன் இல்லாத பிள்ளைகள் யாராவது இருக்கிறார்களா...கொஞ்சம் ஐபேட்....கொஞ்சம் லேப்டாப்.
இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம்... ஆறு வித்தியாசங்கள் எட்டு வித்தியாசங்கள் அல்ல............... ஆயிரம் வித்தியாசங்கள்.


எங்கே தவறு.?


பிள்ளைகளிடத்திலா ? அல்லது  பெற்றோர்கள் இடத்திலா ?.
பிள்ளைகள் வளர்ப்பு முறையில் மாற்றம் வேண்டுமா ?
யார் திருந்தவேண்டும்?  யார் திருத்த வேண்டும்?


அந்த காலம் :-

கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். உங்கள் பள்ளி வாழ்க்கையை...
ஒரு மஞ்சள் துணிபை. கொஞ்சம் உடைந்த சிலேட்டு ஒன்று. பாதி கிழிந்த ஒருவாய்ப்பாடு. நிறையவே கிழிந்த புத்தகங்கள். தின்பதற்கு கொஞ்சம் அரிசி அல்லது மணிலா. கையிலேயே பிடிக்க முடியாத நீளம் கொண்ட குட்டிகுட்டியாய் சில பல்பம்.சின்ன சின்ன நோட்டுகள். பள்ளியிலேயே வழங்கப்படும் மதிய சாப்பாடு. செருப்புகள் இல்லாத எதையும் தாங்கிய கால்கள்.

இந்தகாலம் :- 

எல்லாம் உங்களுக்கே தெரியும்...சொல்லத்தேவையில்லை.


பள்ளிகூடங்களை வம்பிற்க்கு இழுக்க காரணம் இருக்கு. தன்னம்பிக்கை ஊட்டுவதாய் தற்காலம் இல்லை என்பது வேதனையான விஷயம். அதிக மதிப்பெண்கள் எடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு பத்தாம் வகுப்பு பாடங்களை ஒன்பதாம் வகுப்புகளிலேயும் +2 பாடங்களை +1லேயும் நடத்தி நடத்தி மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக மாற்றி விடுகிறார்களே தவிர வாழ்க்கைக்கு தேவையான  வேறு எதையும் சொல்லித்தராதது சோகமே.

தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால் தான் தற்கொலைகள் படிக்கும் வயதிலேயே தோன்றிவிடுகிறது. எதையும் தாங்கும் குணங்களை  பெற்றோரும் சரி போதிப்பதில்லை. விட்டுகொடுக்கும் பழக்கம் அறவே இல்லை. பொறுமை என்றால் என்ன ? என்று கேட்பார்கள் போலும்.  அப்படி சூழ்நிலைகளும் அமையவில்லை.வேகம் வேகம் வேகம் எல்லாவற்றிலும்....


தொலைக்காட்சிகள்.....இண்டர்நெட்...செல்போன்கள்....அழகிய இருசக்கர வாகனங்கள்..... எல்லாம் சேர்ந்தும்....காரணிகளாகின்றன.


கொஞ்சம் நினத்துப்பாருங்கள், அந்தகால சுகாதாரமும் இந்தக்கால சுகாதாரமும்.... குட்டை குளம் ஏரி கிணறு....போன்ற நீரை பருகி வளர்ந்தவர்களே நாமெல்லாம்.    இப்பொழுது மினரல் வாட்டரையே குடித்தாலும்.... ஒத்துக்க மாட்டுதாம்..... ஒரே கம்பெனி வாட்டர் தான் குடிக்க கொடுக்கிறோம் என்னும் பெற்றோர்கள்....ஐயோ! மழையா நனைஞ்சாலே அவ்ளோ தான்.... நாம தெருவில் நனைந்து அணைகட்டி கப்பல் விட்ட ஞாபகம் மறக்க முடியுமா ?......  எங்கே போனது நோய் எதிர்ப்பு திறன் ?.


எல்லாவற்றிற்கும் காரணங்கள்.


காலம் மாறிப்போச்சு.

நமக்கு இருப்பதோ ஒன்றோ இரண்டோ பிள்ளைகள்.
பண வசதி.
நாகரீகம் கற்றவர்கள் என்ற போர்வை.
அடுத்தவரை பார்த்து பொறாமை குணம்.
நானே கஷ்டப்பட்டேன். என் பிள்ளையாவது நல்லா இருக்கட்டுமே என்ற நினைப்பு.
பார்த்து பார்த்து வளர்க்கிறேன் என்ற அதீத பாசம்.
எங்கிட்ட எல்லா வசதியும் இருக்கு என்ற வெளிக்காட்டும் பகட்டுத்தன்மை.
என் பிள்ளையும் டாக்டர் என்ஜினியர் ஆக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும்.
அதிக மார்க் எடுத்தே ஆகவேண்டும் என்ற பள்ளிகளின் மற்றும் பெற்றோர்களின் ஆசை.
அடுத்தவருடன் கம்பேர் செய்து பார்ப்பது....பேசுவது.
இப்படி அடுக்கிக்கொண்டே போனால் பக்கங்கங்கள் பத்தாது......



பணம் படுத்தும் பாடு:- 

எல்லாவற்றிற்கும் மூலகாரணி பணம் எனும் ................
எல்லாவற்றிற்க்கும் தேவைபடுவதால்.....
நூறு ஆயிரமாகவும் ....ஆயிரம் பெற்றவர்கள் இலட்சத்திலும் இலட்சம் பெற்றவர்கள் கோடிகளிலும் ....எப்படியேனும் சம்பாதிக்க துணிந்து விட்டது சமூகம். வளர்ச்சி தேவைதான்....பயன்படுத்தும் முறையில் தான் ஏதோ கோளாறுகள் செய்கின்றோம்.......
எப்படியோ........... சற்றேனும் சிந்தியுங்கள்.

எங்கே தவறு.???????


பிள்ளைகளிடத்திலா?
வளர்க்கும் பெற்றோர்களிடத்திலா?
பள்ளிகளிலா ?
 சமூகத்திலா ?


ஆனால் நிச்சயம் ஒன்று.



வளர்ப்புமுறைகளில் மாற்றம் தேவை.



குழந்தை வளர்ப்பு முறைகளை எல்லோரும் தேடித்தேடி படியுங்கள்.....
எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது...மேற்படி நிகழ்வுகள்.
கஷ்டம்
நஷ்டம்
பாசம்
பணம்
வெற்றி
தோல்வி
விட்டுக்கொடுத்தல் எல்லாம் சொல்லிகொடுங்கள்


பிள்ளைகளையே இழந்து   எல்லாம்இருந்தும்என்ன?      இல்லாமல் இருந்தும்என்ன?
                       யோசிக்க வேண்டிய தருணம்.
                               தவறு எங்கே..... ???







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!