வெள்ளி, டிசம்பர் 14, 2012

கொக்கரக்கோ சேவல்கள்



நீண்ட நாட்களுக்குப் பிறகு

சேவல் கூவி; துயில் எழுப்பியது-

ரிங்டோன் வடிவில் –நான் வைத்த

செல்போனில் அலாரமாய்.


நிஜ சேவல்கள் கூவுவதை

நேரில் கேட்டு நாளாகிவிட்டது.



நகரத்திற்கு இடம் மாறிய பிறகு தான் தெரிந்தது-இது

நரகத்தின் பாதி என்று.



அற்ப கொசுவை ஒழிக்க

ஆயிரமாயிரமாய் செலவழிக்க வேண்டியுள்ளது.



எல்லா பொருட்களின் உதவியினால்

உடல் பெருத்தது தான் மிச்சம்.


பெயர் தெரியா பெரிய நோய்கள்-சம்பள

பணத்தின் பாதி செலவாகிப்போனது.


பிள்ளைகளின் பள்ளிக்கூடங்கள்- மீதி

பணத்தை பங்குப்போட்டுக்கொள்கிறது.


‘நெல்லு மரம்

எப்படி இருக்கும்

பிள்ளை கேட்டது.



காலைப் பனியில் நடைப்பயிற்சி

கால்வாசி நோயைத்தான் கண்டிக்கிறது.



வாகனங்களின் சத்தத்தில்

விரைவில் வந்தது செவிட்டுத்தன்மை.



இல்லாத உறவுகளை

இருப்பதாகக் காட்டிக்கொண்டு

இணையத்தால்

இழந்துக்கொண்டிருக்கிறோம்

பக்கத்து வீட்டு பாசங்களை....



கொக்கரக்கோ சேவல்கள்

குழம்பாகிப் போனதில்

மறக்க முடியாத

நம் கிராமத்து சேவல்களின்

நினைவாக

செயற்கை சேவல்கள்

கூவிக்கொண்டுதான்  இருக்கிறது-இன்னும்

செல்போன்களில்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!